Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ரோடுமாமனந்தல், சிறுவங்கூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்களுக்கு பணம் தராமல் ஏமாற்றும் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் மீது நடவடிக்கைக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தில் மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பொதுமக்களுக்கு சரிவர ஊதியத்தை சிறுவங்கூர் கிராம ஊராட்சி மன்ற துணை தலைவர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுவங்கூர் மற்றும் ரோடு மாமனந்தல் கிராமங்களில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பொதுமக்களின் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, தேசிய ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை சிறுவங்கூர் கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் தன் வசம் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றி ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த ஊழல் குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவரிடம் நியாயம் கேட்ட சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த ஒரு நபரை மூன்று நபர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோடு மாமனந்தல் மற்றும் சிறுவங்கூர் கிராம மக்கள், சிறுவங்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.